தனியார் பஸ் மோதி மூதாட்டி பலி உதவி தொகை பெற சென்றபோது பரிதாபம்
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே தனியார் பஸ் மோதி மூதாட்டி இறந்தார்.கிருமாம்பாக்கம் அடுத்த மூர்த்திக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி சுப்பம்மாள், 76. இவர் நேற்று காலை உதவித்தொகை பணத்தை எடுப்பதற்காக, கன்னியக்கோவிலில் உள்ள வங்கி கிளைக்கு சென்றார். பின், அங்கிருந்து வீட்டுக்கு செல்வதற்காக கன்னியக்கோவில் நான்கு முனை சந்திப்பு பகுதியில் சாலையை கடக்க முயன்றார்.அப்போது, பாகூரிலிருந்து புதுச்சேரி நோக்கி சென்ற ஒரு தனியார் பஸ் அவர் மீது மோதியது. இதில், சுப்பம்மாள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.தகவலறிந்த கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.