| ADDED : ஜன 06, 2024 06:41 AM
புதுச்சேரி, :ஆசிய கோப்பை டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியில் விளையாடி தங்கம் வென்று புதுச்சேரி திரும்பிய விளையாட்டு வீரர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.டென்னிஸ் பந்து கிரிக்கெட் ஆசிய கோப்பைக்கான போட்டி, நேபாளம் நாட்டில் பொக்ரா என்ற இடத்தில் கடந்த 31 மற்றும் 1ம் தேதி இரண்டு நாட்கள் நடந்தது. இதில், இந்தியா, நேபாளம், இலங்கை, பூடான், சிங்கப்பூர், வங்காளதேசம் என 6 நாடுகள் கலந்து கொண்டன.இந்திய அணி சார்பில் புதுச்சேரி டென்னிஸ் பந்து கிரிக்கெட் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். சீனியர் ஆண்கள், பெண்கள் பிரிவில் புதுச்சேரியைச் சேர்ந்த 6 பேர், ஜூனியர் ஆண்கள் பெண்கள் பிரிவில் 6 பேர் கலந்து கொண்டனர்.சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவு இறுதி போட்டிகளில் நேபாளம் மற்றும் இந்திய அணிகள் மோதின. இரண்டு பிரிவிலும் இந்திய அணி நேபாளத்தை தோற்கடித்து தங்கம் வென்றது. ஆசிய கோப்பை போட்டியில், இந்திய ஆண்கள் அணிக்கு பயிற்சியாளராக ரத்தின பாண்டியன் இருந்தார். தங்கம் வென்ற விளையாட்டு வீரர்கள் நேற்று புதுச்சேரி ரயில் நிலையம் வந்தனர். அவர்களை சக வீரர்கள் மற்றும் உறவினர்கள் மலர் துாவி வரவேற்றனர்.