உதவி மேலாண் அமைப்பு செயலி ரயில் நிலையத்தில் அறிமுகம்
புதுச்சேரி: புதுச்சேரி ரயில் நிலையத்தில், ரயில்வே பாதுகாப்பு படை உதவி மேலாண்மை அமைப்பு செயலி அறிமுகம் செய்யப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படை திருச்சி கோட்டம், முதுநிலை கோட்ட பாதுகாப்பு ஆணையர் அறிவுறுத்தலின் பேரில், ரயில் பயணிக்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக 'ரயில்வே பாதுகாப்பு படை உதவி மேலாண்மை அமைப்பு செயலி' துவக்கி வைத்த நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி ரயில் நிலையம் நடைமேடை எண்-1ல் நடந்த விழாவில், பாதுகாப்பு படை ஆய்வாளர் சூரஜ் குமார் முன்னிலையில், நிலைய மேலாளர் ராமதாஸ் அமைப்பு செயலியை துவக்கி வைத்தார். இந்த செயலியின் மூலம் ரயில் மற்றும் நிலையத்தில் நடக்கும் குற்றங்களை ரயில்வே பாதுகாப்பு படை கட்டுபாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதையடுத்து, அங்கு பணியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும் முடியும் என, ஆய்வாளர் சூரஜ் குமார் தெரிவித்தார். மேலும், செயலியின் முக்கியத்துவம், செயல்படும் விதம் குறித்து பயணிகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.