உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனைவியிடம் பணம் பறிப்பு கணவர் மீது வழக்குப் பதிவு

மனைவியிடம் பணம் பறிப்பு கணவர் மீது வழக்குப் பதிவு

பாகூர்: கத்தியை காட்டி மிரட்டி மனைவியிடமிருந்து பணத்தை பறித்து சென்ற கணவர் போலீசார் தேடிவருகின்றனர். பாகூர் அடுத்த கொம்மந்தான்மேடு வீரன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் உத்தரவேலு 45; கூலி தொழிலாளி. இவரது மனைவி பாப்பாத்தி 44; அதே பகுதியில் உள்ள பைப் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளாகிறது. குழந்தைகள் இல்லை. இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. இது குறித்து பாப்பாத்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகூர் போலீசில் வாய்மொழியாக புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் உத்திரவேலுவை அழைத்து அவருக்கு அறிவுரைகள் கூறி அனுப்பி வைத்தனர்.இந்நிலையில், பாப்பாத்தி நேற்று முன்தினம் மதியம் மருத்துவமனைக்கு சென்று விட்டு தனது ஸ்கூட்டியில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, கொம்மந்தான்மேடு சவுக்கு தோப்பு அருகே மறைந்திருந்த உத்தரவேலு, பாப்பாத்தியை வழிமறித்து அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 10 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்து கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து, புகாரின் பேரில், பாகூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !