சென்டாக் மாணவர்களுக்கு கல்வி நிதி விரைவாக வழங்க வலியுறுத்தல்
புதுச்சேரி: சென்டாக் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள கல்வி நிதி உதவியை உடனடியாக வழங்க வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தி உள்ளது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலக்குழு கூட்டம் ரெட்டியார்பாளையம் அஜிஸ் நகரில் நடந்தது. கூட்டத்திற்கு, தலைவர் கொளஞ்சியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் சரவணன், பொருளாளர் உமா சாந்தி, துணைத் தலைவர்கள் ஹரி கிருஷ்ணன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், மாநிலத்தில் உள்ள பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வீட்டு மனைப் பட்டா வழங்கிட வேண்டும். சிறப்பு கூறு திட்ட நிதியைப் பயன்படுத்தி வீடற்ற மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகளைக் கட்டித் தர வேண்டும். அரசு தற்போது வழங்கி வரும் தாய்வழிச் சாதிச் சான்றிதழ் முறையைத் தொடர்ந்து அமல்படுத்த வேண்டும். கடந்த 2022-ம் ஆண்டு முதல் சென்டாக் மாணவர்களுக்கு வழங்காமல் உள்ள கல்வி நிதி உதவியை உடனடியாக வழங்க வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிப் படிப்பு வரை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு வழங்கப்படும் முழுமையான கல்வி உதவித் திட்டத்தில், இடம் பெயர்ந்த மாணவர்களுக்கும் நிதி உதவி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், மாநில மாநாட்டை வரும் அக்டோபர் மூன்றாம் வாரத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது.