உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சுற்றுலா பயணிகளை விரட்டக்கூடாது போலீசாருக்கு முதல்வர் அறிவுரை

சுற்றுலா பயணிகளை விரட்டக்கூடாது போலீசாருக்கு முதல்வர் அறிவுரை

புதுச்சேரி புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை போலீசார் விரட்டக்கூடாது என, முதல்வர் ரங்கசாமி பேசினார். புதுச்சேரி போலீசில், கடந்தாண்டு புதிதாக சேர்க்கப்பட்ட, 289 கான்ஸ்டபிள், 19 ஓட்டுனர்களுக்கு கோரிமேடு, போலீஸ் மைதானத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். அரசு கொறடா ஆறுமுகம் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் ரங்கசாமி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். சிறந்த பயிற்சி போலீசாருக்கு சான்றிதழ், கேடயம் வழங்கினார். ஒட்டுமொத்த முதலிடத்தை ஆண்கள் பிரிவில் சதீஷ்குமார், பெண்கள் பிரிவில் சண்முகபிரியா பெற்றனர்.பின், முதல்வர் ரங்கசாமி பேசுகையில், 'புதுச்சேரி போலீஸ் துறைக்கு பொதுமக்களை பாதுகாக்கும் பொறுப்பு உள்ளது. இதற்கு தான் கடுமையான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. புதுச்சேரி சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. போலீஸ் துறையை சேர்ந்தவர்கள் சுற்றுலா பயணிகளை வரவேற்பவர்களாக இருக்க வேண்டும். விரட்டி விடுபவர்களாக இருக்கக்கூடாது' என்றார்.தொடந்து சாகச நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

261 பணியிடங்கள்

அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், 'ஊர்காவல் படையில் 500 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். விரைவில் அவர்கள் பயிற்சி பெற உள்ளனர். மேலும் கடலோர காவல்படையில் 200 காவலர்கள், 61 சப்- இன்ஸ்பெக்டர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ