புதுச்சேரியில் 5 இடங்களில் நேரடி கொள்முதல் மையம்
புதுச்சேரி: இந்திய உணவுக்கழம் மூலம், விவசாயிகளுக்காக பல்வேறு இடங்களில் நேரடி கொள்முதல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை கூடுதல் வேளாண் இயக்குநர் அலுவலக செய்திக்குறிப்பு: நடப்பாண்டில் இந்திய அரசு நிர்ணயம் செய்த குறைந்த பட்ச ஆதார வியைான சன்ன ரகத்திற்கு குவின்டால் ஒன்றுக்கு 2,389 ரூபாயும் மற்ற ரகங்களுக்கு 2,369 ரூபாயும் இந்திய உணவுக்கழகம் கொள்முதல் விலையாக நிர்ணயித்துள்ளது. இதற்காக, விவசாயிகள் நெல்லின் தரத்தை உயர்த்த குறைந்த பட்ச தர நிர்ணயங்களுக்கு உட்பட்டு ஈரப்பதம் 17 சதவீதம் மிகாமலும், சேதமடைந்த, நிறமாறிய முளைத்த நெல் மணிகள் 5 சதவீதம் மிகாமலும், முதிர்ச்சியடைந்த சுருங்கிய நெல் மணிகள் 3 சதவீதம் மிகாமல் இருக்க வேண்டும். இந்த தரத்தை உயர்த்துவதற்கு காயவைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ஆகும் செலவினை ஈடு செய்ய, ஒரு கிலோவுக்கு 2 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதற்காக, கன்னியக்கோவில், மதகடிப்பட்டு, கூனிச்சம்பட்டு, கரையாம்புத்துார், மடுகரை ஆகிய பகுதியில் நேரடி நெல் கொள்முதல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகத்தில் விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.