ஜெயிலில் போதை பொருட்கள் நடமாட்டம்:அதிகாரிகள் விசாரணை
புதுச்சேரி: காலாப்பட்டு ஜெயிலில் மதில் சுவர் மீது ஏறி போதை பொருட்கள் வீசப்பட்டதா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில், நேரு வீதியில், ஜெயில் இருந்தது. மார்க்கெட், வணிய நிறுவனங்கள் என பொதுமக்கள் கூட்டம் நெரிசல் என பல பிரச்னைகளுடன் இருந்து வந்தது. ஜெயிலில் இருந்து கைதிகளை கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் போது, போக்குவரத்து நெரிசலில், போலீசார் அவதிப்பட்டனர். மேலும், பழைய கட்டடம் மற்றும் பாதுகாப்பு இல்லாமல் இருந்ததால், ஜெயிலை காலாப்பட்டு பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அங்கு, உயரமான மதில் சுவர், பாதுகாப்பு கோபுரம், கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிறையில் இருக்கும் கைதிகளுக்கு மதில் சுவர் மீது ஏறி போதை பொருட்கள் வீசிப்பட்டுள்ளதாக அதிரடிப்படை போலீசார் மூலம் தகவல் கிடைத்துள்ளது. அதையடுத்து, சிறையில், போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, கஞ்சா பாக்கெட், குட்கா மற்றும் உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் கண்டறிந்து பறிமுதல் செய்துள்ளனர். ஜெயிலில் உள்ள சமையல் அறையில் வேலை செய்யும் கைதிகள் மூலம் போதை பொருட்களை, ஜெயிலில் உள்ள முக்கிய ரவுடிகளுக்கு சப்ளை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மதில் சுவர் மீது ஏறி, போதை பொருட்களை வீசிய சம்பவம் தொடர்பாக, ஜெயில் அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.