பொதுப்பணித்துறையில் கோப்புகள் திருட்டு; வவுச்சர் பெண் ஊழியர் கைது
புதுச்சேரி : பொதுப்பணித்துறையில் கோப்புகளை திருடிச் சென்ற வவுச்சர் பெண் ஊழியர் கைது செய்யப்பட்டார்.புதுச்சேரி லெபர்தனே வீதியில், பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, 15 ஊழியர்களின் சர்வீஸ் புத்தகம் மற்றும் 3 கோப்புகள் கடந்த 5ம் தேதி திடீரென அலுவலகத்தில் இருந்து மாயமானது.இது தொடர்பாக பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் கருணாகரன் ஒதியஞ்சாலை போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.அதே அலுவலகத்தில் வவுச்சர் ஊழியராக பணியாற்றும், சந்தாசாகிப் வீதியைச் சேர்ந்த கண்மணி, 50; என்பவர் சர்வீஸ் புத்தகங்களை திருடியது தெரியவந்தது. விசாரணையில், தன் மீது நடக்கும் துறை ரீதியான விசாரணையில் இருந்து தப்பிக்க சர்வீஸ் புத்தகங்கள் அனைத்தையும் திருடிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.