காமராஜர் கல்வி நிதியுதவி கிடைக்காத இறுதியாண்டு மாணவர்களுக்கு நெருக்கடி
புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் கல்வி திட்டத்தின் கீழ் ஏழை மாணவர்களின் உயர் கல்வி கனவு நனவாகி வருகிறது. வழக்கமாக, காமராஜர் கல்வி திட்ட நிதியுதவி காலத்தோடு வழங்கப்பட்டு விடும். ஆனால், கடந்த 2022ம் ஆண்டு முதல் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு நிதியுதவி இன்னும் வழங்கவில்லை. இதனால் மாணவர்கள் தற்போது நெருக்கடிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த 2022ம் கல்வியாண்டில் சேர்ந்த இன்ஜினியரிங் உள்ளிட்ட மாணவர்கள் இறுதியாண்டிற்கு வந்துவிட்டனர். சில மாதங்களில் இறுதி செமஸ்டர் எழுதி படிப்பினையே முடிக்க போகின்றனர். ஆனால் நிதியுதவி கிடைக்காத சூழ்நிலையில் அவர்களுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இரண்டு செமஸ்டருக்கு பணத்தை கட்டு; இல்லையெனில் இறுதியாண்டு செமஸ்டர் எழுத முடியாது என்று கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். 60 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை திரட்டும் நிலையில் பெற்றோர்களும் அலைந்து வருகின்றனர்.இத்திதிட்டத்திற்கு போதிய நிதி ஒதுக்கியும், மாணவர்களுக்கும் இன்னும் போய் சேரவில்லை. இறுதியாண்டு மாணவர்களுக்கு உடனடியாக கல்வியுதவி சேரவும், அவர்கள் நெருக்கடி இல்லாமல் தேர்வு எழுதவும் கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி உயர்கல்வி துறைக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.