போலி பங்குச்சந்தையில் முதலீடு செய்து ரூ.55 லட்சம் இழந்த மாஜி அரசு ஊழியர்
புதுச்சேரி:போலி பங்குச்சந்தையில் முதலீடு செய்து, லாஸ்பேட்டையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் ரூ. 55 லட்சத்தை மோசடி கும்பலிடம் இழந்தார்.லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜ்குமரன், 64; ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவரை தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைன் பங்குச் சந்தையில் முதலீடு செய்து, எப்படி திறமையாக சம்பாதிக்கலாம். அதிக லாபத்தை தரும் பங்குசந்தை நிறுவனங்கள் குறித்தும், நேரடியாக முதலீடு செய்வது எப்படி போன்ற பல்வேறு தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால், வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து கொள்ளும் படி கூறியுள்ளார்.இதைநம்பிய அவர் மர்மநபர் தெரிவித்த வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்தார். பிறகு, அந்த குழுவில் ஆன்லைன் பங்குசந்தை தொடர்பான பல்வேறு தகவல்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, ஓய்வு பெற்ற அரசு ஊழியர், மர்மநபர் அனுப்பிய பங்குச்சந்தை நிறுவன லிங்கில் பல்வேறு தவணைகளாக ரூ. 54 லட்சத்து 66 ஆயிரத்து 500 முதலீடு செய்தார். அதன்மூலம் அவருக்கு 96 லட்சம் ரூபாய் லாபம் வந்துள்ளதாக வாட்ஸ் ஆப் கணக்கில் காட்டியுள்ளது.பணத்தை எடுக்க முயன்றபோது, வருமான வரி, ஜி.எஸ்.டி., கட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகே, மோசடி கும்பலிடம் போலி பங்குச்சந்தையில் முதலீடு செய்து பணத்தை இழந்தது தெரியவந்தது.இதுகுறித்து அவர், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.