அதிக வட்டி தருவதாக மோசடி அரசு ஒப்பந்த ஊழியர் கைது
வில்லியனுார், : அதிக வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறி பணம் சுருட்டிய அரசு ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்டார்.வில்லியனுார் அடுத்த ஒதியம்பட்டு பள்ளிக்கூட வீதியை சேர்ந்தவர் ஜெயக்குமார், 41. இவர் புதுச்சேரி குடிசை மாற்று வாரியத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிகிறார். இவரது உறவினர் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சாலை, பனமலைபேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கோபி, 38. இவர் பங்கு சந்தை நிதி நிறுவனம் நடத்தி அதிக வட்டி கொடுப்பதாக தெரிவித்து, ஒதியம்பட்டு பகுதியில் பலரிடம் ரூ. 1 லட்சம் டிபாசிட் செய்தால் மாதம் 8 ஆயிரம் வட்டி தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி பலர் லட்சக் கணக்கில் ஜெயக்குமாரிடம் பணம் கொடுத்தனர்.கொடுத்தவர்களுக்கு சில மாதங்கள் வரை வட்டி பணம் வந்தது. பின், வட்டி தரவில்லை. ஒதியம்பட்டு சீனுவாச கார்டனை சேர்ந்த உலகநாதன் மனைவி தீபா, 38, என்பவர் 51 லட்சம் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்ததால், வில்லியனுார் போலீசில் ஜெயக்குமார் மீது புகார் தெரிவித்தார்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப் பதிந்து, ஜெயக்குமாரை நேற்று கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோபியை தேடி வருகின்றனர்.