100 சதவீதம் சிறப்பு கூறு நிதியை செலவிட; 21 அரசு துறைகளுடன் கவர்னர் ஆலோசனை
புதுச்சேரி: சிறப்பு கூறு நிதியாக இந்தாண்டு 502.53 கோடி ஒதுக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் 100 சதவீத செலவு செய்ய கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.புதுச்சேரி அரசு பட்ஜெட்டில் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியில் 16 சதவீத நிதியை சிறப்புக்கூறு நிதியாக ஒதுக்கீடு செய்யப்படுகின்றது. அப்படி ஒதுக்கீடு செய்யப்படும் நிதி, 21 அரசு துறைகள் மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுகின்றது.நிதியாண்டு இறுதி கட்டத்தை எட்டியுள்ள சூழ்நிலையில், சிறப்பு கூறு நிதி குறித்த ஆய்வு கூட்டம் கவர்னர் கைலாஷ்நாதன் தலைமையில் ராஜ்நிவாசில் நடந்தது. கவர்னரின் செயலர் மணிகண்டன், ஆதிதிராவிடர் நலத்துறைச் செயலர் முத்தம்மா, ஆதிதிராவிடர் நலத்துறையின் இயக்குநர் இளங்கோவன் மற்றும் சிறப்புக்கூறு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் துறைகளின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக செலவிடப்படும் சிறப்புக்கூறு நிதியின் பயன்பாடு குறித்து முழுவதுமாக மதிப்பாய்வு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.488 கோடி நிதியில், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 95 சதவீதம் செலவு செய்யப்பட்டது. நடப்பு நிதியாண்டில் புதுச்சேரி அரசு ரூ. 502.53 கோடி ரூபாயாக சிறப்புக்கூறு நிதி ஒதுக்கீடு செய்தது. இதில் ஆதிராவிடர் நலத் துறைக்கு ரூ.209.09 கோடி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறைக்கு ரூ.110 கோடி, குடிமை பொருள் வழங்கல் துறைக்கு ரூ.50.36 கோடி, பள்ளி கல்வித் துறைக்கு ரூ.27 கோடி, சுகாதார துறைக்கு ரூ.29 கோடி ஒதுக்கப்பட்டது. இந்தாண்டு இதுவரை 90 சதவிதம் சிறுப்பு கூறு நிதி செலவிடப்பட்டுள்ள சூழ்நிலையில் முழு செலவினம் குறித்த விவரங்களைக் கவர்னர் கைலாஷ்நாதன் கேட்டறிந்தார். இந்தாண்டு சிறப்பு கூறு நிதி செலவினத்தில் 100 சதவித இலக்கினை எட்ட உத்தரவிட்டார்.கூட்டத்தில் அதிகாரிகளுக்கு கவர்னர் பிறப்பித்த உத்தரவு: புதுச்சேரி அரசால் ஒதுக்கீடு செய்யப்படும் சிறப்புக்கூறு நிதியை ஆண்டு இறுதியில் செலவு செய்யாமல் முறையாக திட்டமிட்டு விரிவாக செலவு செய்ய வேண்டும்.சிறப்புக்கூறு நிதியை 100 சதவீதம் முழுமையாக செலவு செய்ய வேண்டும். அவ்வாறு செலவு செய்யப்படும் நிதி முழுமையாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்காக மட்டுமே செலவு செய்யப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் சிறப்புக்கூறு நிதி முறையாக செலவு செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறிப்பாக, சாலை வசதி, மின்விளக்கு, தரமான குடிநீர் போன்ற வசதிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.கல்வி சமுதாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கும் என்பதால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கி பயிலும் மாணவர் விடுதிகளின் மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கழிவறை, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளோடு பிற வசதிகளை மேம்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும்.சிறப்புக்கூறு நிதியை ஆதிதிராவிட நலத்துறை மட்டுமல்லாமல் பிற அரசுத் துறைகளும் பயன்படுத்தவதால் துறைகள் இடையிலான ஒருங்கிணைந்த செயல்பாடு இருக்க வேண்டும். ஒதுக்கீடு செய்யப்படும் நிதி எந்த வித குறைபாடும் இல்லாமல் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்காக முழுமையாக செலவு செய்வதில் முனைப்பு காட்ட வேண்டும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கான குடியிருப்பு வசதிகள் மற்றும் கடன் திட்டங்களை விரிவுபடுத்த வேண்டும். அவர்களுக்கு அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் நலன் குறித்து தொடர் ஆலோசனை நடத்த வேண்டும். வரும் நிதிநிலை அறிக்கையில் அவர்களுக்கான கூடுதல் திட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.இவ்வாறு கவர்னர் உத்தரவிட்டார்.