உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மனதளவில் ராம பட்டாபிஷேகம் நடத்திய அனுமன் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

மனதளவில் ராம பட்டாபிஷேகம் நடத்திய அனுமன் ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்

புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் ஸ்ரீமத் ராமாயண நவாக உபன்யாசம் நடந்து வருகின்றது.நேற்று எட்டாம் நாளாக ஓய்வு பெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் செய்த உபன்யாசம்; நான் ராம துாதன் என்று ராவணன் சபையில் உரக்க கர்ஜித்த அனுமன், கம்பீரமாக நின்றான். ராவணனை நோக்கி, என் ராஜன் சுக்ரிவனுடன் வந்து ராமபிரான் உன்னை வதம் செய்து விடுவார். ராமனை எவராலும் வெல்ல முடியாது. சுக்ரீவன் ஒரு தானவனோ, கந்தர்வனோ, ஒரு நாகனோ அல்ல. அவர் வானரம். ராமன் வானரத்தாலும், நரனாலும் மரணம் ஏற்படக்கூடாது என்று நீ வரம் பெறவில்லை. ராமனிடம் சரணாகதி அடைந்துவிடு என்று கொந்தளித்தான்.இதை கேட்ட ராவணன் மிகுந்த கோபம் கொண்டு அனுமானைக் கொன்றுவிடும்படி ஏவினான். உடனே விபீஷணன் இடை மறித்து, ராஜனே, குரங்கை கொல்வது ராஜ நீதிக்கு விரோதமானது. நீங்கள் தர்மம் அறிந்தவர். ராஜ நீதி அறிந்தவர். பிராணிகளின் பரமார்த்தம் அறிந்தவர். ஆகையால், தர்மத்திற்கு விரோதமாக இந்தக் குரங்கைக் கொல்லாதீர். வானரத்திற்கு அதன் வாலின் மீதுதான் ஆசை அதிகம். அதனால், வானரத்தின் வாலில் தீ வைக்கலாம்.அதன்படி, அனுமன் வாலில் தீ வைத்து நாற்சந்திகளில் இழுத்துச் சென்றார்கள். இந்த செய்தியை கேட்டதும் சீதா பிராட்டி மன வேதனை அடைந்து, அனுமாருக்காக அக்னி பகவானைப் பிரார்த்தித்தார். இது குறித்து சுந்தர காண்டத்தில் சொல்லப்பட்டுள்ள சுலோகம் தீ மற்றும் அதன் விளைவுகள் சம்பந்தப்பட்டது என்பதால், இந்த சுலோகத்தை ராகு கிரகத்துடன் சம்பந்தப்படுத்தி நோக்குதல் சரியாக அமையும்.தன் கற்பு நெறியின் மீது ஆணையிட்டு, சீதா தேவி அனுமானுக்காக அக்னி பகவானிடம் மனமுருகப் பிரார்த்தனை பண்ணியதால், அதனை ஏற்று அக்னி பகவான் அனுமனின் வாலில் இடப்பட்ட தீ அவருக்குக் குளிர்ச்சியாக இருக்கும்படி பண்ணினார்.அனுமன் தன் வாலில் வைக்கப்பட்ட தீயைக் கொண்டே இலங்கை முழுதும் தீயிட்டு அழித்தார். பின், சமுத்திரத்தில் வாலை நனைத்து, தீயை அணைத்து, மீண்டும் சீதா பிராட்டியை வணங்கினான்.சீக்ரமே ராமன் வந்து ராவணணை அழித்து, ஜெயத்துடன் நீங்கள் பட்டாபிஷேகம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று தனக்கே உரிய தீர்க்க தரிசனத்தினால் தன் மனதளவில் ராம பட்டாபிஷேகம் நடத்திவிட்டார் அனுமார்.இவ்வாறு அவர் உபன்யாசம் செய்தார்.

உபன்யாசம் நேரம்

இன்று இரவு 7:30 மணி முதல் 8:30 மணிவரை .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை