பாப்ஸ்கோ ஊழியர்கள் கோர்ட் அவமதிப்பு வழக்கில் புதுச்சேரி தலைமை செயலருக்கு ஐகோர்ட் உத்தரவு
புதுச்சேரி : பாப்ஸ்கோ ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில் தலைமை செயலருக்கும், நிதி செயலருக்கும் ஐகோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோ நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிரந்தர ஊழியர்களுக்கு 2018 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சம்பளம் வழங்கப்படவில்லை. பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை.அதையடுத்து 120 நிரந்தர ஊழியர்கள், 6 ஓய்வு பெற்ற ஊழியர்கள், 6 இறந்த ஊழியர்களின் குடும்ப வாரிசுகள் ஐகோர்ட்டில் நிலுவை சம்பளம், ஓய்வூதிய பலன்கள் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இவ்வழக்கில் கடந்த 08.07.2024 அன்று ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. நிலுவை சம்பளத்தை வழங்க உத்தரவிட்டது. ஆனாலும் பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. அதையடுத்து ஊழியர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் அன்மையில் விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் ஸ்டாலின் அபிமன்யூ ஆஜரானார். சம்பளம் இல்லாதால் பாப்ஸ்கோ ஊழியர்கள் நிலைகுலைந்துள்ளனர். அவர்களிடம் வாழ்வாதாரம் கேள்விகுறியாகியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பினை புதுச்சேரி அரசு அமல்படுத்தவில்லை என வாதித்திட்டார்.இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி இளந்திரையன் ,பாப்ஸ்கோ ஊழியர்களுக்கும், அவர்களது குடும்பத்திற்கு நிலுவை சம்பளம் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுச்சேரி தலைமை செயலர், நிதி செயலர் 10 கோடியை உடனடியாக ஒதுக்கி கணக்கு மற்றும் கருவூலத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். பாப்ஸ்கோ நிறுவனம் ஊழியர்களின் வங்கி கணக்கு விபரங்களை கணக்கு மற்றும் கருவூலத் துறையிடம் தர வேண்டும். கணக்கு கருவூலத் துறை பயனாளிகளிடம் கணக்கில் சம்பளம், ஓய்வூதிய பலன்களை செலுத்த வேண்டும். இந்த பணியை முடித்து 13.08.2025 அன்று அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.ஐகோர்ட் அதிரடி உத்தரவினை தொடர்ந்து பாப்ஸ்கோ ஊழியர்களுக்கு நிலுவை சம்பளம், ஓய்வூதிய பலன்கள் கிடைக்க உள்ளது.