மீண்டும் லாட்டரி சீட்டு விற்க ஏற்பாடு வைத்திலிங்கம் எம்.பி., கண்டனம்
புதுச்சேரி : புதுச்சேரியில் லாட்டரி சீட்டு விற்பனையை மீண்டும் துவங்க அரசு திட்டமிட்டு இருப்பதாக வைத்திலிங்கம் எம்.பி., தெரிவித்தார். காங்., அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாள் விழா நடந்தது. அவரது உருவப்படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்திய காங்., தலைவர் வைத்திலிங்கம், நிருபர்களிடம் கூறியதாவது.புதுச்சேரியில் லாட்டரி விற்பனை செய்ய, மொத்த வியாபாரியை பா.ஜ., எம்.எல்.ஏ.க்கள் கொண்டு வந்துள்ளனர். இவர்கள் பா.ஜ.,வின் 'பி' டீம். வருமான வரி சோதனையில் பல கோடி பணம் சிக்குகிறது. பல வழக்குகள் உள்ள நபரை பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் புதுச்சேரிக்கு அழைத்து வந்து வருங்கால முதல்வர் என்கின்றனர்.. மக்களின் நிலைமைதான் வேதனையாக உள்ளது. இதனை காங்., கண்டிக்கிறது.ஓடி வந்தவர்கள், வியாபாரிகளுக்கு சீட் கொடுத்தால் என்ன நடக்கும் என்பதை காங்., கட்சிக்கு பாடமாக அமைந்துள்ளது.லாட்டரி அதிபருக்கு பா.ஜ., மாநில தலைவர் செல்வகணபதி, அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம் மறைமுக ஆதரவு தெரிவிக்கின்றனர். லாட்டரி வியாபாரியை புதுச்சேரியில் விட்டால் அரசியல் என்ன ஆகும். ஏற்கனவே விபசாரம், மதுபானம், போதை அரசியல் நடந்து வந்தது. தற்போது லாட்டரி சீட்டு அரசு நடக்கிறது. இதனை முதல்வர் வணங்கும் அப்பா பைத்தியம் சாமி கூட ஏற்கமாட்டார்.இவ்வாறு அவர் கூறினார்.