காரைக்கால் மீனவர்கள், படகுகளை மீட்க இலங்கைக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும் எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தல்
புதுச்சேரி : இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்கள் மற்றும் அவர்களது படகுக ளை, இந்திய ராணுவத்தை அனுப்பி மீட்க வேண்டும் என, எதிர்க்கட்சி தலைவர் சிவா வலியுறுத்தி உள்ளார். அவரது அறிக்கை: காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரியை சேர்ந்த 12 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினரால் துப்பாக்கி முனையில் கைது செய்து, விசைப்படகுகளையும் பறிமுதல் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. இது, மீனவர்களின் வாழ்வாதார உரிமைகளை பறிப்பதாகும். இலங்கை அரசு தொடர்ந்து மீனவர்களையும், அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்வது , பின்னர் தமிழக முதல்வரின் அழுத்ததால் மத்திய அரசின் முயற்சி காரணமாக மீனவர்கள் மட்டும் விடுவிக்கப்படுவதும், அவர்களது படகுகளை இலங்கையே வைத்துக் கொள்வதுமாக உள்ளது. படகுகளை பறி கொடுத்த காரைக்காலை சேர்ந்த 25 மீனவர் குடும்பத்தினரின் வாழ்வாதாரம் வீணாகி வருகிறது. எனவே மத்திய மற்றும் மாநில அரசுகள் இப்பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களது படகுகளையும் விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இத்தகைய சம்பவங்கள் மீண்டும் நிகழா மல் தடுக்க ஒருமுறை இலங்கை கடற்பகுதிக்குள் இந்திய ராணுவத்தை அனுப்பி அங்குள்ள இந்திய மீனவர்களின் படகுகள் அனைத்தையும் மீண்டும் இந்தியாவிற்கே கொண்டு வர வேண்டும்.