| ADDED : ஆக 25, 2011 01:59 AM
புதுச்சேரி : அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சட்டக் கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். பெரிய காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மூன்றாம், ஐந்தாமாண்டு சட்டப்படிப்புகளில் 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.நேற்று கல்லூரிக்கு வந்த மாணவர்கள் திடீரென அன்னா ஹசாரே போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஊழலுக்கு எதிராக கோஷமிட்டு கலைந்து சென்றனர். உண்ணாவிரதம்: லோக்பால் மசோதாவை நிறைவேற்றக் கோரி அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து, அபிஷேகப்பாக்கம் பிரிஸ்ட் பல்கலைக்கழக மாணவர்கள் அடை யாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.போராட்டத்தில் பிரிஸ்ட் பல்கலைக்கழக ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். ஊழலால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், ஊழலை ஒழிக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நாட்டின் மீது அனைவருக்கும் அக்கறை வேண்டும் என வலியுறுத்தி ஆசிரியர்களும், மாணவர்களும் பேசினர். ஊழலில் ஈடுபட மாட்டோம் என்றும் மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.