புதுச்சேரி துணைவேந்தர் சிறைபிடிப்பு நள்ளிரவில் மாணவர்கள் கைது; தடியடி
புதுச்சேரி:பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்து , புதுச்சேரி பல்கலை துணைவேந்தரை சிறைபிடித்த மாணவர்களை, நள்ளிரவில் போலீசார் தடியடி நடத்தி கைது செ ய்த ச ம்பவம் பரபரப் பை ஏற்படுத்தியது. புதுச்சேரி பல்கலையின், காரைக்கால் கிளையில் படிக்கும் மாணவி ஒருவர், தனக்கு பேராசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை தருவதாக அழுத ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து, முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி கவர்னரிடம் புகார் அளித்துள்ளார். இந்நிலையில், புதுச்சேரி மத்திய பல்கலையிலும், மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியதாக புகார் எழுந்தது. பல்கலையில் எழும் பாலியல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், சம்மந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பல்கலை மானியகுழு 2015 விதிகளின்படி பாலியல் புகார்களை விசாரிக்கும் கமிட்டியை அமைக்க வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கத்தினர் நேற்று முன்தினம் பல்கலையில், துணைவேந்தர் பிரகாஷ் பாபுவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். மாணவர்களிடம் பேச்சு நடத்திய பல்கலை நிர்வாகம், கோரிக்கைக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க மறுத்ததால், மாணவர்களின் போராட்டம் நீடித்தது. நள்ளிரவு, 2:00 மணிக்கு பல்கலைக்குள் நுழைந்த காலாப்பட்டு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை தடியடி நடத்தி, ஆறு மாணவியர் உட்பட 24 பேரை கைது செய்து, ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று, நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், மருத்துவ பரிசோதனைக்கு பின் மாணவியரை நேற்று காலை விடுவித்தனர். மாணவர்களை ஸ்டேஷனில் வைத்திருந்தனர். இந்நிலையில், மாணவர்களை போலீசார் அடித்தும், தரதரவென இழுத்தும் சென்றும் கைது செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதைப்பார்த்து ஆவேசமடைந்த சக மாணவர்கள், கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்கவும், பல்கலை நிர்வாகத்தை கண்டித்தும் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பல்கலை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்திய மாணவர்கள், துணைவேந்தர் உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர். நேற்று மாலை வரை மாணவர்கள் விடுவிக்கப்படாததால், பல்கலை வட்டாரத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.