மீனவர்களை விடுவிக்க ஆந்திரா முதல்வருக்கு ரங்கசாமி கடிதம்
புதுச்சேரி; காரைக்கால் மீனவர்களில் மீன்பிடி படகுகளை விடுவிக்ககோரி ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: காரைக்கால் பகுதியைச் சேர்ந்த முனுசாமி, முத்துதமிழ்செல்வன் ஆகியோருக்கு சொந்தமான, 3 மீன்பிடி படகுகளை ஆந்திரா உள்ளூர் மீனவர்களால் பறிமுதல் செய்யப்பட்டு, கடந்த 31.07.2025 மற்றும் 20.09.2025 ஆகிய தேதிகளில் ஆந்திரா நெல்லூர் மாவட்டம், ஜூவ்வலதின் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் காரைக்கால் கிளஞ்சல்மேடு பகுதியைச் சேர்ந்த பாலதண்டாயுதம், சுப்பிரமணியன், அவர்களது படகுகளும், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் மீனவர்களால் தடுத்து வைக்கப்பட்டு ஜூவ்வலதின்னே மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.