சாலையோரம் துணிக்கடைகள் போக்குவரத்து போலீசார் வழக்கு
பாகூர் : போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரம் துணி கடை அமைத்த வியாபாரி மீது போக்குவரத்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி - கடலுார் சாலையில் போக்குவரத்து இடையூறாக சாலைகளை ஆக்கிரமித்து பேனர்கள், விளம்பர பலகைகள், கடைகள் வைக்கப்பட்டு வருவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். விபத்துக்களை தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீஸ் ஏட்டு அய்யனார், காவலர் பரமகுரு ஆகியோர் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரி - கடலுார் சாலை நோனாங்குப்பம் மேம்பாலம் அருகே சாலையோரம் போக்குவரத்திற்கு இடையூறாக, துணி கடை அமைத்து வியாபாரம் செய்வது தெரியவந்தது. இதையடுத்து, போக்கு வரத்துக்கு இடையூறாக கடை வைக்க கூடாது என எச்சரிக்கை விடுத்து, கடையை அகற்றினர். கடை உரிமையாளரான முத்தியால்பேட்டை சோலை நகரை சேர்ந்த சீனிவாசன் 45; என்பவர் மீது, போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.