ரூ.5 கோடி ஏலச்சீட்டு மோசடி வழக்கு சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு மாற்றம்
புதுச்சேரி: ரூ. 5 கோடி ஏலச்சீட்டு மோசடி வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டு விசாரணை துவங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நெல்லித்தோப்பு ரயில்வே பாலம் அருகில் ஜே.பி., சிட் பண்ட்ஸ் பெயரில் பிலோமீனா என்பவர், ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தார். இவரிடம், ஏராளமானோர் சீட்டு கட்டி வந்தனர். அவர்களிடம், சீட்டு எடுத்தவர்களுக்கு பிலோமீனா பணம் தரவில்லை.இதுகுறித்த புகாரின் பேரில், முதலியார்பேட்டை போலீசார், பிலோமீனா, அவரது கணவர் பியர்ஜான் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிந்து, பிலோமீனாவை கைது செய்தனர்.விசாரணையில், பலரை ஏமாற்றி 5 கோடி ரூபாய் வரை வசூல் செய்து திருப்பி தராமல் மோசடி செய்ததும், அதற்கு, கவர்னர் மாளிகையில் டிரைவாக வேலை செய்த சப் இன்ஸ்பெக்டர் சிற்றரசன், பிலோமீனாவுக்கு, பின் புலமாக செயல்பட்டு வந்தது தெரிய வந்தது.அதன்பேரில் மோசடி வழக்கில், சப் இன்ஸ்பெக்டர் சிற்றரசன் சேர்க்கப்பட்டார். இதையடுத்து, சப் இன்ஸ்பெக்டர் சிற்றரசன், மீதான குற்றச்சாட்டு குறித்து துறை ரீதியான விசாரணை நடந்து வந்த நிலையில், கடந்த 7 ம் தேதி அவரை 'சஸ்பெண்ட்' செய்து டி.ஜி.பி., ஷாலினி சிங் உத்தரவிட்டார்.இந்நிலையில், ஏலச்சீட்டு மூலம் 5 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதால், அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து, மோசடி வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு நேற்று மாற்றப்பட்டு, அங்கு வழக்குப் பதிந்து விசாரணை துவங்கப்பட்டுள்ளது.