எம்.எல்.ஏ.,வை மிரட்டிய ரவுடியால் பெரும் பரபரப்பு
புதுச்சேரி; புதுச்சேரி, கோரிமேடு ஜிப்மர் மருத்துவமனை எதிரில் உழவர்கரை நகராட்சிக்கு சொந்தமான வணிக வளாகத்தில், திலாஸ்பேட்டை ரவுடி ராமு, 35, சில கடைகளை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்.நகராட்சி ஒதுக்கி கொடுத்த இடத்தையும் தாண்டி பல அடிக்கு இடத்தை ஆக்கிரமித்து கடை நடத்துவதால் அங்குள்ள மற்ற கடைக்காரர்களுடன் பிரச்னை ஏற்பட்டது.இது தொடர்பாக, ஜிப்மர் வணிக வளாக வியாபாரிகள், புதுச்சேரி வியாபாரிகள் சங்க பொறுப்பில் உள்ள சுயேச்சை எம்.எல்.ஏ., சிவசங்கரனிடம் இதுகுறித்து முறையிட்டனர். சிவசங்கரன் உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜிடம், ஜிப்மர் எதிரில் வணிக வளாக கடைகள் ஆக்கிரமிப்பு குறித்து புகார் தெரிவித்து, நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.இதையறிந்த ராமு, நேற்று முன்தினம் ரெட்டியார்பாளையத்தில் உள்ள சிவசங்கரன் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு, பொதுமக்களிடம் குறை கேட்டு கொண்டிருந்த எம்.எல்.ஏ.விடம், 'ஜிப்மர் கடை விவகாரத்தில் நீங்கள் தலையிட வேண்டாம். 'எனக்கு முதல்வரை நன்கு தெரியும். கடை விவகாரத்தில் தலையிட்டால் பலவற்றை சந்திக்க நேரிடும்' என, மிரட்டி சென்றார். அப்போது, என்னை பற்றி எம்.எல்.ஏ.வுக்கு தெரியவில்லை என, ஆதரவாளர்கள் மத்தியில் கூறிவிட்டு சென்றுள்ளார்.இது தொடர்பாக, சிவசங்கரன் ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் அளித்தார். ரவுடி ராமு மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். ராமு மீது கொலை உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.சிவசங்கரனை மிரட்டிய ராமுவை கைது செய்ய வலியுறுத்தி, ஜிப்மர் வியாபாரிகள் சங்கம், புதுச்சேரியில் உள்ள வியாபாரிகள் சங்கம் சார்பில் இன்று கோரிமேட்டில் இருந்து வியாபாரிகள் பேரணியாக புறப்பட்டு கவர்னர், முதல்வர், டி.ஜி.பி., உள்ளிட்டோரிடம் புகார் மனு அளிக்க உள்ளனர்.