நிலுவைத் தொகையை உடனே வழங்க பல்கலை ஓய்வு ஊழியர் சங்கம் கோரிக்கை
புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான அகவிலைப்படி நிலுவைத்தொகை உடனே வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து தொழில்நுட்ப பல்கலைக்கழக ஓய்வு பெற்ற ஊழியர் சங்கத்தின் தலைவர் இசைவாணன் அறிக்கை: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு கடந்த ஜூலை 2024ம் ஆண்டில் இருந்து அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய மற்றும் மாநில அரசுகள் உத்தரவிட்டன. அதன்படி, நவம்பர் மற்றும் டிசம்பர் மாத அகவிலைப்படி உயர்வு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பென்ஷனுடன் சேர்த்து வழங்கப்பட்டது. ஆனால், ஜூலை முதல் அக்டோபர் வரையிலான 4 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு இதுவரையில் வழங்கப்படவில்லை. இந்நிலையில், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டும் 4 மாத அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்கப்பட்டு விட்டது. ஆனால், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.ஆகையால், தொழில்நுட்ப பல்கலைக்கழக நிர்வாகம் எந்தவித பாரபட்சம் இல்லாமல் உடனடியாக 4 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை வழங்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.