புதுச்சேரி: காணும் பொங்கலையொட்டி சுற்றுலா தலங்கள், பொழுது போக்கு இடங்கள் களைகட்டின.பொங்கல் பண்டிகையொட்டி, தொடர்ச்சியாக கடந்த 15ம் தேதி முதலே புதுச்சேரியின் அனைத்து பகுதிகளும் களைகட்டியுள்ளன. காணும் பொங்கலான நேற்று அனைத்து சுற்றுலா தலங்கள், பொழுது போக்கு இடங்களில் கூட்டம் அலைமோதியது.மணக்குள விநாயகர் கோவில், அரவிந்தர் ஆசிரமத்தில் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். பாரதி பூங்கா, தாவரவியல் பூங்காவில் குடும்பத்துடன் குவிந்த பொதுமக்கள் பொழுதை போக்கினர். தாவரவியல் பூங்கா சிறுவர் ரயிலில் குட்டீஸ்கள் உற்சாகமாக ரவுண்டு வந்து மகிழ்ந்தனர். சுற்றுலா இடங்கள்
காணும் பொங்கலையொட்டி, கடற்கரை சாலை, பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை உள்ளிட்ட சுற்றுலா இடங்களில் கூட்டம் அலைமோதியது.சுற்றுலா பயணிகள் கடலில் இறங்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து கடற்கரையில் பல இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தன. 8 இடங்களில் பெரியக்கடை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சீகல்ஸ் உள்பட பல்வேறு பகுதிகளில் உயிர் காக்கும் வீரர்கள் நிறுத்தப்பட்டு இருந்தனர். போலீசாரும், உயிர்காக்கும் வீரர்களும் கடலில் இறங்கி குளிக்க முயன்றவர்களை எச்சரித்து அனுப்பினர். படகு குழாம்
நோனாங்குப்பம் சுண்ணாம்பாறு, ஊசுட்டேரியில் மூன்றாம் நாளாக நேற்றும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. உற்சாகமாக படகு சவாரி செய்தனர். சுண்ணாம்பாறு படகு குழாம், பாரடைஸ் பீச்சில் சென்று, குடும்பத்துடன் பொழுதை போக்கி காணும் பொங்கலை கொண்டாடினர். கடற்கரை கிராமங்கள்
காணும் பொங்கலை யொட்டி கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையிலான கடற்கரை கிராமங்களிலும் பொதுமக்கள் குடும்பத்துடன் திரண்டனர்.கடற்கரை அழகினை ரசித்த அவர்கள் கடற்கரை மணலில் விளையாடி மகிழ்ந்தனர்.