அளவுக்கு அதிகமாக குடித்த தொழிலாளி பலி
திருக்கனுார்: மணலிப்பட்டு சாராயக்கடை அருகே போதையில் மயங்கி கிடந்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார். வீடூர், முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்முருகன், 35; கூலி தொழிலாளி. இவருக்கு, ரேகா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். குடிப்பழக்கம் உடைய அருள்முருகன் கடந்த 23ம் தேதி மணலிப்பட்டு சாராயக்கடை அருகே குடிபோதையில் மயங்கி கிடப்பதாக ரேகாவிற்கு தகவல் வந்துள்ளது. இதையடுத்து, ரேகா அருள்முருகனை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். திருக்கனுார் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.