பாட்மின்டன்: அரையிறுதியில் தான்வி
கவுகாத்தி: அசாமின் கவுகாத்தியில், 'சூப்பர் 100' அந்தஸ்து பெற்ற மாஸ்டர்ஸ் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தான்வி சர்மா, சக வீராங்கனை தான்யாவை எதிர்கொண்டார்.முதல் செட்டை தான்வி 21-17 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை, நீண்ட போராட்டத்துக்குப் பின் 27-25 என தான்வி வசப்படுத்தினார். 44 நிமிடம் நடந்த போட்டி முடிவில் தான்வி 21-17, 27-25 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் அனுபமா, 21-19, 6-21, 12-21 என, சக வீராங்கனை அஷ்மிதாவிடம் தோல்வி அடைந்தார். மற்ற காலிறுதி போட்டிகளில் இந்தியாவின் இஷாராணி, தஸ்னிம் மிர் தோல்வியடைந்தனர். ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் இந்தியாவின் துஷார் சுவீர், 21-14, 21-11 என மலேசியாவின் முகமது யூசுப்பை வென்று, அரையிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் தருண் 11-21, 18-21 என மலேசியாவின் டிரையான்ஷாவிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் சங்கர், 15-21, 21-13, 22-20 என சக வீரர் சனீத் தயானந்தை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார். ஆண்கள் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் சாய் பிரதீக், புருத்வி ஜோடி 22-20, 21-18 என மலேசியாவின் இ ஷெங், லிம் ஜியான் ஜோடியை வென்றது.