மறக்க முடியாத இரட்டை சதம் * சுப்மன் கில் பெருமிதம்
துபாய்: ''பர்மிங்ஹாம் டெஸ்டில் இரட்டை சதம் அடித்தது என்றும் நினைவில் நிற்கும்,'' என சுப்மன் கில் தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்படுகிறது. ஜூலை மாத விருதுக்கு இந்திய டெஸ்ட் அணி கேப்டன் சுப்மன் கில், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்ரிக்காவின் வியான் முல்டர் பரிந்துரைக்கப்பட்டனர்.சமீபத்தில் முடிந்த 'ஆண்டர்சன் - சச்சின் டிராபி' டெஸ்ட் தொடரில் 5 டெஸ்டில், 754 ரன் (4 சதம், சராசரி 75.40, 'ஸ்டிரைக் ரேட்' 65.56) குவித்த சுப்மன் கில், சிறந்த வீரராக தேர்வானார். இதுகுறித்து சுப்மன் கில் கூறியது:ஐ.சி.சி., சார்பில் ஜூலை மாதத்தின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வானது மகிழ்ச்சியாக உள்ளது. இது மிகவும் ஸ்பெஷலானது. ஏனெனில் கேப்டனாக களமிறங்கிய முதல் டெஸ்ட் தொடரில் வெளிப்படுத்திய திறமைக்கு ஏற்ப, இது கிடைத்துள்ளது. பர்மிங்ஹாம் டெஸ்டில் இரட்டை சதம் அடித்த தருணம், மறக்க முடியாதது. இது என்றென்றும் நினைவில் நிலைத்து நிற்கும். இங்கிலாந்து தொடரில் சிறந்த தருணங்களில் ஒன்றாக இது எப்போதும் இருக்கும்.தவிர கேப்டனாக இத்தொடர் எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள உதவியாக இருந்தது. இந்தியா, இங்கிலாந்து என இரு தரப்பிலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் இத்தொடர் ஸ்பெஷலானதாக இருக்கும் என்பது உறுதி.சிறந்த வீரராக தேர்வு செய்த ஐ.சி.சி., குழுவினருக்கும், இங்கிலாந்து தொடரில் என்னுடன் விளையாடிய சக வீரர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து வரும் தொடர்களிலும் சிறப்பாக செயல்பட்டு, தேசத்திற்கு பெருமை சேர்க்க விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.முதல் வீரர்ஐ.சி.சி., சிறந்த வீரராக நான்காவது முறை (2025, ஜூலை) தேர்வான முதல் வீரர் ஆனார் சுப்மன் கில். முன்னதாக 2023ல் ஜனவரி, செப்டம்பர், 2025ல் பிப்ரவரியில் இவ்விருது பெற்றுள்ளார்.கவாஸ்கர் பாராட்டுசுப்மன் கில் அடுத்து துலீப் டிராபி தொடரில் (ஆக. 28-செப். 14) வடக்கு மண்டல அணி கேப்டனாக பங்கேற்க உள்ளார். இதுகுறித்து இந்திய அணி முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறுகையில்,'' சவாலான இங்கிலாந்து தொடரில் ஆறு வாரம் நடந்த ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றார் கேப்டன் சுப்மன் கில். இருப்பினும் இவர் ஓய்வெடுக்காமல், துலீப் டிராபியில் பங்கேற்க இருப்பது வரவேற்கத்தக்கது. அணியில் உள்ள மற்ற வீரர்களும் இதுபோல களமிறங்க வேண்டும் என சொல்லாமல் சொல்லியுள்ளார் சுப்மன்,'' என்றார்.