அரையிறுதியில் இளம் இந்தியா: பெண்கள் டி-20 உலக கோப்பையில்...
கோலாலம்பூர்: 'சூப்பர்-6' போட்டியில் அசத்திய இந்திய அணி, 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறியது.மலேசியாவில், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகளுக்கான ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பை 2வது சீசன் நடக்கிறது. கோலாலம்பூரில் நடந்த 'குரூப்-1' பிரிவு, 'சூப்பர்-6' போட்டியில் 'நடப்பு சாம்பியன்' இந்தியா, வங்கதேசம் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.வங்கதேச அணிக்கு கேப்டன் சுமையா அக்தர் (21*), ஜன்னத்துல் மவுமா (14) ஆறுதல் தர, 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 64 ரன் மட்டும் எடுத்தது. இந்தியா சார்பில் 'சுழலில்' அசத்திய வைஷ்ணவி சர்மா 3 விக்கெட் கைப்பற்றினார்.சுலப இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு திரிஷா கைகொடுத்தார். 31 பந்தில் 40 ரன் (8 பவுண்டரி) விளாசினார். இந்திய அணி 7.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 66 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சானிகா (11), கேப்டன் நிக்கி பிரசாத் (5) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகி விருதை வைஷ்ணவி வென்றார்.லீக் சுற்றில் 3 போட்டியிலும் வென்ற இந்தியா, தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்தது. 'குரூப்-1' பிரிவில் 9 புள்ளிகளுடன் முதலிடம் பெற்ற இந்தியா, அரையிறுதிக்குள் நுழைந்தது.