வரலாறு படைத்தார் ஆனந்த்குமார்: உலக ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் தங்கம்
பெய்தய்ஹே: உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப்பில் அசத்திய இந்தியாவின் ஆனந்த்குமார், 2வது தங்கம் வென்றார்.சீனாவில் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் நடந்தது. ஆண்களுக்கான 42 கி.மீ., மாரத்தான் போட்டியில் இந்தியா சார்பில் ஆனந்த்குமார் வேல்குமார் 22, பங்கேற்றார். பந்தய துாரத்தை 58 நிமிடம், 29.747 வினாடியில் கடந்த தமிழகத்தின் ஆனந்த்குமார், முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார்.இது, இத்தொடரில் ஆனந்த்குமார் கைப்பற்றிய 2வது தங்கம், 3வது பதக்கம் ஆனது. ஏற்கனவே 1000 மீ., ஸ்பிரின்ட் பிரிவில் தங்கம் வென்ற இவர், 500 மீ., ஸ்பிரின்ட் பிரிவில் வெண்கலம் வென்றிருந்தார். இதன்மூலம் உலக ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் அரங்கில் 2 தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.