| ADDED : செப் 05, 2026 11:21 PM
புதுடில்லி: ''வரும் ஆசிய விளையாட்டில் மீண்டும் தங்கம் வெல்ல முடியும் என நம்பிக்கை உள்ளது,'' என அவினாஷ் சபிர் தெரிவித்துள்ளார்.இந்திய தடகள வீரர் அவினாஷ் சபிள் 31. கடந்த ஆசிய விளையாட்டு 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார். கடந்த ஆண்டு (2025, ஜூலை) மொனாக்கோவில் நடந்த 'டைமண்ட் லீக்' தடகளத்தில் பங்கேற்றார். தடையை தாண்டி நீரில் குதித்த போது, மற்றொரு வீரர் மீது மோத, வலது முழங்கால் தசை நார் கிழிந்தது. பின் ஆப்பரேஷன் செய்து கொண்ட இவர், தற்போது மீண்டு வந்துள்ளார். வரும் ஆசிய விளையாட்டில் பங்கேற்க உள்ள அவினாஷ் சபிள் கூறியது:மொனாக்கோ தடகளத்தில் காயம் அடைந்து மீண்ட பின், பல்வேறு ஏற்ற, இறக்கங்கள் இருந்தன. இதன் பின் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு, மீண்டுள்ளேன். சமீபத்திய காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்க முடியாதது ஏமாற்றம் தந்தது. தற்போது தன்னம்பிக்கையுடன் உள்ளேன்.கடந்த 2022ல் ஆசிய விளையாட்டில் பங்கேற்ற போது இருந்த அதே உடற்தகுதியுடன் இருப்பதாக உணர்கிறேன். மீண்டும் தங்கம் வெல்ல முடியும் என நம்பிக்கை உள்ளது.எனது போட்டிக்கு இன்னும் 23 நாள் உள்ளன. இதற்காக சிறப்பான முறையில் தயாராகி வருகிறேன். வரும் 10ல் டில்லியில் நடக்க உள்ள இந்தியன் தடகள சீரிசில் பங்கேற்க உள்ளேன். 2026ல் நான் களமிறங்க உள்ள முதல் போட்டி இது. இவ்வாறு அவர் கூறினார்.