ரூ.1,000 லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., - உதவியாளர் கைது
அரியலுார்:பட்டா பெயர் மாற்றம் செய்வதற்கு, 1,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., மற்றும் உதவியாளர் கைது செய்யப்பட்டனர். அரியலுார் அருகே ஜெயராமபுரம் கிராமத்தை சேர்ந்த சிலம்பரசன், 35, பட்டாவில் பெயர் மாறுதல் செய்ய கோரி, கோவிந்தபுரம் வி.ஏ.ஓ., சரஸ்வதி, 55, என்பவரை அணுகினார். வி.ஏ.ஓ., 1,000 ரூபாய் லஞ்சம் கேட்டதால், பணம் கொடுக்க விரும்பாத சிலம்பரசன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். போலீசாரின் அறிவுரைப்படி, நேற்று, சிலம்பரசன், பணத்தை வி.ஏ.ஓ., உதவியாளர் அனிதா, 38, என்பவரிடம் கொடுத்துள்ளார். அங்கு வந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், வி.ஏ.ஓ., சரஸ்வதி, உதவியாளர் அனிதா ஆகியோரை கைது செய்தனர்.