உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கழிவுநீர் கலந்த குடிநீர் புதிதாக 6 பேருக்கு பாதிப்பு மருத்துவமனையில் அனுமதி

கழிவுநீர் கலந்த குடிநீர் புதிதாக 6 பேருக்கு பாதிப்பு மருத்துவமனையில் அனுமதி

பல்லாவரம்:கழிவுநீர் கலந்த குடிநீர் பருகியதால், மூன்று நாட்களாக பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று, புதிதாக ஆறு பேர், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.தாம்பரம் மாநகராட்சி காமராஜர் நகர், கன்டோன்மென்ட் பல்லாவரம் மலைமேடு பகுதிகளுக்கு, சமீபத்தில் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.இந்த குடிநீர், நிறம் மாறியும், துர்நாற்றத்துடனும் இருந்ததாக, பகுதிவாசிகள் தெரிவித்த நிலையில், இந்த குடிநீரை பருகிய பலருக்கு வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட உடல் உபாதை ஏற்பட்டது.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 60க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி மூன்று பேர் பலியாகினர். நேற்று முன்தினம் நிலவரப்படி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 36 பேர், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் எட்டு பேர், தனியார் மருத்துவமனையில் ஆறு பேர் சிகிச்சையில் இருந்தனர்.இதில், குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் 26 பேர் குணமடைந்ததால், அவர்கள் நேற்று 'டிஸ்ஜார்ஜ்' செய்யப்பட்டனர். 16 பேர், தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர்.மலைமேடு பகுதியைச் சேர்ந்த ஆறு பேர், வாந்தி, பேதி உள்ளிட்ட உபாதைகளுக்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், நேற்று புதிதாக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.கழிவுநீர் கலந்த குடிநீர் பருகியதால், நாள்தோறும் சிலர் பாதிக்கப்படுவது தொடர்கதையாக இருப்பதால், காமராஜர் நகர், மலைமேடு பகுதிவாசிகள் பீதி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !