கட்டுமான அனுமதி விண்ணப்பத்தில் கழிவு அகற்றுவோர் விபரம் கட்டாயம்
சென்னை, கட்டடங்கள் கட்டவும், இடிக்கவும் விண்ணப்பிக்கும்போது, கழிவு அகற்றும் பொறுப்பாளர் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை குறிப்பிட வேண்டும் என, சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னையை குப்பையில்லா நகராக மாற்றவும், கட்டட கழிவுகளை ஆங்காங்கே கொட்டுவதை தடுக்கவும், மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.அதன்படி, கட்டட கழிவை கையாள்வதற்கான வழிகாட்டுதல்களும் வெளியிடப்பட்டு உள்ளன.இந்நிலையில், கட்டடம் கட்டுவதற்கும், இடிப்பதற்கும் மாநகராட்சியில் அனுமதி பெறும்போது, அதனால் ஏற்படும் கழிவு அகற்றும் பொறுப்பாளர் யார் என்பதையும் குறிப்பிட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் பொது இடங்கள், நீர்நிலைகளில் குப்பை கொட்டுபவர்களை கண்டறிந்து, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.அதேபோல், கட்டடம் கட்டும் வரைப்படத்திற்கு விண்ணப்பிக்கும் போதும், பழைய கட்டடங்களை இடிக்கும் போதும், அதனால் ஏற்படக்கூடிய கழிவை அகற்றக்கூடிய பொறுப்பு நபர் யார், அவரின் பெயர், முகவரி, மொபைல் போன் எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். கட்டட கழிவு எவ்வளவு உருவாகும் என்று குறிப்பிட வேண்டும். அப்போது தான், 15 நாட்களில் அதற்கான அனுமதி வழங்கப்படும். பணிகள் முடிந்தப்பின், அதனால் உருவான கழிவுகள் அகற்றப்பட்டது என, மாநகராட்சி சான்று அளிக்கும். அவ்வாறு சான்று பெறாமல், குடிநீர், மின் இணைப்பு பெற முடியாது.உருவாகும் கட்டட கழிவை, ஏழு நாட்களுக்குள் அகற்ற வேண்டும். இல்லையேல், மாநகராட்சியே அகற்றி, அபராதத்துடன், அதற்கான செலவு தொகையும் வசூலிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.