உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் பொங்கிய தி.மு.க., கவுன்சிலர்கள்

தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் பொங்கிய தி.மு.க., கவுன்சிலர்கள்

தாம்பரம்:தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில், தி.மு.க., கவுன்சிலர்கள் பொங்கி எழுந்து, காரசாரமான கேள்விகளை எழுப்பினர். ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் கையெழுத்தை போலியாக போட்டு, மின் இணைப்பு பெறப்பட்டதை கண்டித்தும், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.தாம்பரம் மாநகராட்சி கூட்டம், மேயர் வசந்தகுமாரி தலைமையில், நேற்று காலை நடந்தது. இதில், துணை மேயர் காமராஜ், கமிஷனர் பாலச்சந்தர் மற்றும் அனைத்து கட்சி கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

கோரிக்கை

கூட்டத்தில், தி.மு.க., உள்ளிட்ட கவுன்சிலர்கள் பேசியதாவது:தாம்பரத்திலுள்ள 5 மண்டலங்களில், 4வது மண்டலத்திற்கு மட்டும் குறைந்த நிதியில் கூட்ட பொருள் வந்துள்ளது. 4வது மண்டலத்தில், பள்ளிக்கூடத்திற்கு கழிப்பறை வேண்டும் என, இரண்டரை ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. லாரி தண்ணீர் முறையாக வருவதில்லை, பிரத்யேக வாகனம் இல்லாததால், பாதாள சாக்கடை அடைப்புகளை நீக்க முடியாமல், பிரச்னை தலைவிரித்தாடுகிறது. 5வது மண்டலத்தில் குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. பாதாள சாக்கடை பணியை செய்யும் வி.வி.வி., என்ற நிறுவனம், முறையாக பணி செய்யாததே, பிரச்னை அதிகரிக்க காரணம். இன்னும் பல தெருக்களில், பாதாள சாக்கடை இணைப்பு கொடுக்கவே இல்லை.இந்த மண்டலத்தில், பருவ மழையை எதிர்கொள்ள போதிய பணிகள் செய்யவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இதை ஞாபகப்படுத்தியும், அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை.50வது வார்டு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. இந்த வார்டு மக்கள், கழிவுநீர் கலந்த குடிநீரை குடிக்கின்றனர். கழிவுநீர் கலந்த தண்ணீரிலேயே குளிக்கின்றனர்.ரங்கநாதபுரம் ஏரியில் மருத்துவக் கழிவுகள் கலப்பதால், ஏரியை ஒட்டியுள்ள மக்களுக்கு சிறுநீரகம் பழுது, புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.இந்த வார்டு மக்களுக்கு மாநகராட்சியால், சுத்தமான குடிநீரைக் கூட வழங்க முடியவில்லை. நகராட்சியாக இருந்தபோது, பல்லாவரம் பகுதியில் குடிநீர் இணைப்பிற்கு முன்பணமாக, 5,000 ரூபாய் வசூலிக்கப்பட்டது.மாநகராட்சியாக மாறியதும், 10,000 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில், நகராட்சியாக இருந்தபோது, முன்பணம் கட்டியவர்கள், மீண்டும் பணம் கட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது, பொதுமக்களிடையே பிரச்னையை தீவிரப்படுத்தி உள்ளது. தெரு பெயர் பலகைகளில், தமிழ் மொழியை தவறாக அச்சிட்டு, அவமரியாதை ஏற்படுத்துகின்றனர். அந்த ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். வார்டுகளில் கொசு மருந்து அடிப்பதே இல்லை.இவ்வாறு, அவர்கள் கேள்வி எழுப்பினர்.

காட்டம்

கவுன்சிலர்கள் கூறிய புகார்களுக்கு பதில் கூற வேண்டிய மேயர், ஒவ்வொரு கேள்விக்கும், அதிகாரிகளிடம் கேட்டதால், ஒட்டுமொத்த கவுன்சிலர்களும் கடுப்பாகி, மாநகராட்சியில் மேயருக்கு அதிகாரம் உள்ளதா? அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதா எனத் தெரியவில்லை என, காட்டமாக பேசினர். தொடர்ந்து, 198 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

'காயிதே மில்லத்' பெயர்

குரோம்பேட்டையில், ஜி.எஸ்.டி., - ராதா நகரை இணைக்கும் வகையில், இலகுரக வாகன சுரங்கப்பாதை கட்டும் பணி நடந்து வருகிறது. விரைவில், இச்சுரங்கப்பாதை பயன்பாட்டிற்கு திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில், 26வது வார்டு ம.தி.மு.க., பெண் கவுன்சிலர் புஸிராபானு, இந்த சுரங்கப்பாதைக்கு 'காயிதே மில்லத்' பெயர் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை கொண்டு வந்தார். கூட்டத்தில் இக்கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும், இது தொடர்பாக பரிசீலித்து, அடுத்தகட்ட முடிவு எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.ஆர்ப்பாட்டம் செய்ய முடிவு'மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசையும், தாம்பரம் மாநகராட்சியையும் கண்டித்து, அனகாபுத்துாரில் வரும் 3ம் தேதி, அ.தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை:தாம்பரம் மாநகராட்சி, முதலாவது மண்டலத்திற்கு உட்பட்ட அனகாபுத்துார் பகுதிகளில், அத்தியாவசிய தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை திட்டத்தை முடிக்கவில்லை. அம்மா உணவகத்தை முடக்க நினைக்கின்றனர். அதனால், தி.மு.க., அரசு மற்றும் தாம்பரம் மாநகராட்சியை கண்டித்தும், அ.தி.மு.க., சார்பில், அனகாபுத்துார் நுாலகம் அருகில், வரும் 3ம் தேதி காலை 10:00 மணிக்கு, கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும். இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., வெளிநடப்பு

கூட்டத்தில், கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் கூறத் தெரியாத மேயரை கண்டித்தும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் கையெழுத்தை போலியாக போட்டு, மின் இணைப்பு பெறப்பட்டதைக் கண்டித்தும், கருப்புச் சட்டை அணிந்து கூட்டத்தில் பங்கேற்ற அ.தி.மு.க., கவுன்சிலர்கள், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.அப்போது, அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர் சங்கர் கூறியதாவது:இரண்டரை ஆண்டுகளாக, மாநகராட்சியில் எதுவுமே நடக்கவில்லை. நாய் தொல்லை பெருகி, சாலையில் செல்பவர்களை விரட்டி விரட்டி கடிப்பது தான் நடக்கிறது. அ.தி.மு.க., கவுன்சிலர்களின் வார்டுகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. எத்தனை கட்டடங்களுக்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் கையெழுத்தை போலியாக போட்டு, மின் இணைப்பு பெறப்பட்டுள்ளது என்பது குறித்து முழு விசாரணை நடத்தி, அது தொடர்புடைய அதிகாரிகள், புரோக்கர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவில்லை எனில், அ.தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்