மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சி, 20வது வார்டு மெல்ரோசாபுரம் பகுதியில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, கடைகள் மற்றும் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இந்த பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, பத்து ஆண்டுகளுக்கு முன், இந்த பகுதியில் நகராட்சி சார்பில், 'மினி டேங்க்' மற்றும் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது.இந்த மின் டேங்க்கில் உள்ள குழாய் இணைப்பு, சில மாதங்களுக்கு முன் உடைந்தது. நகராட்சி சார்பில், மீண்டும் புதிய குழாய் அமைக்கப்படவில்லை.இதையடுத்து, அப்பகுதி மக்கள் தண்ணீர் வீணாவதை தடுக்க, சிறிய பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை அறுத்து, குழாய் இருந்த இடத்தில் பொருத்தியுள்ளனர். இதில், தண்ணீர் பாட்டில் மூடியை திறந்து, தண்ணீர் பிடித்தவுடன் மீண்டும் மூடியை மூடிவிட்டு செல்கின்றனர்.இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:இந்த மினி டேங்க் குழாய் மற்றும் மேல் மூடி உடைந்துள்ளது. மேல் மூடி காற்றில் பறக்காமல் இருக்க, அதன் மீது சிமென்ட் கற்கள் வைக்கப்பட்டுள்ளன.தண்ணீர் பிடிக்க, தற்காலிகமாக அமைக்கப்பட்ட தண்ணீர் பாட்டில் முழுதும், பச்சைநிற பாசி படிந்துள்ளது. இந்த 'மினி டேங்க்' அருகில் உறிஞ்சு குழாய் இல்லாததால், தண்ணீர் சாலையோரம் வழிந்து செல்கிறது.அருகிலேயே தண்ணீர் தேங்குவதால், குடம் வைத்து தண்ணீர் பிடிக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, இந்த மினி டேங்க்கை சுத்தம் செய்து, புதிய குழாய் இணைப்பு ஏற்படுத்த, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.