முதலியார்குப்பம் படகு குழாமில் சுற்றுலா பயணியர் குதுாகலம்
செய்யூர்: செய்யூர் அருகே முதலியார்குப்பம் கிராமத்தில் உள்ள கழிவெளி பகுதியில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் கீழ் செயல்படும் படகு குழாம் உள்ளது.விடுமுறை நாட்களில் சென்னை, புதுச்சேரி மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணியர் வருகை தந்து, படகுகளில் சவாரி செய்து, கடற்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வு எடுக்கும் கூடாரங்களில் அமர்ந்து, பொழுதுபோக்குவது வழக்கம்.இங்கு, எட்டு இருக்கைகள் கொண்ட விசைப்படகு, ஆறு இருக்கைகள் கொண்ட விசைப்படகு, மூன்று இருக்கைகள் கொண்ட அதிவேக விசைப்படகு, இரண்டு இருக்கைகள் கொண்ட துடுப்பு படகு என, பல வகையான படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன.பெரும்பாலானோர் குடும்பத்தினருடன் வருவதால், எட்டு இருக்கைகள் கொண்ட விசைப்படகு, ஆறு இருக்கைகள் கொண்ட விசைப்படகில் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர். குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மூன்று இருக்கைகள் கொண்ட அதிவேக விசைப்படகுகளை விரும்புகின்றனர்.வார விடுமுறை மற்றும் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு, நேற்று ஏராளமான சுற்றுலா பயணியர், படகு குழாமிற்கு வந்து, தங்களது குழந்தைகள், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.