நந்திவரம் மகாலட்சுமி நகரில் மோசமான சாலையால் அவதி
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, ஜி.எஸ்.டி., சாலை அருகே உள்ள மகாலட்சுமி நகர் பிரதான சாலை, மிகவும் மோசமாக உள்ளது. மேலும், இந்த சாலையில் போடப்பட்டிருந்த ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குண்டும் குழியுமாகவும், போக்குவரத்திற்கு லாயக்கற்ற முறையிலும் உள்ளது.சேதமான சாலையை சீரமைக்கக்கோரி, நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை புகார் மனு அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. சேதமான சாலை மற்றும் தேங்கிய கழிவுநீரை அகற்றி சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.