இட வசதியற்ற சுகாதார நிலையம் திருப்போரூரில் கர்ப்பிணியர் அவதி
திருப்போரூர், திருப்போரூர் மலைக்கோவில் அடிவாரம் அருகே, பேரூராட்சி சார்ந்த சிறிய கட்டடத்தில், அரசு ஆரம்ப துணை சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.இந்த துணை சுகாதார நிலையம் வாயிலாக திருப்போரூர், கண்ணகப்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஏராளமானோர் பயனடைந்து வருகின்றனர்.இங்கு கர்ப்பிணியருக்கு தடுப்பூசி, பரிசோதனை, குழந்தைகளுக்கு தடுப்பூசி மற்றும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஓராண்டிற்கு 197 கர்ப்பிணியர் பதிவு செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால், குறுகிய இடத்தில் செயல்படும் இந்த துணை சுகாதார நிலைய கட்டடத்தில் கழிப்பறை, குடிநீர் மற்றும் போதிய படுக்கை, இருக்கை வசதிகள் இல்லை.இதனால், கர்ப்பிணியர் மற்றும் குழந்தைகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.ஒரே நேரத்தில் அதிகமானோர் குவியும் போது, சிலர் மருத்துவர் அறை உள்ளேயும், பலர் மருத்துவ கட்டடத்திற்கு வெளியேயும் காத்திருக்கின்றனர்.மேலும், மழை நேரத்தில் கட்டடத்தில் தண்ணீர் கசிவதால், மருந்து மாத்திரைகள், ஆவணங்களை பாதுகாக்க, மருத்துவ ஊழியர்கள் சிரமப்படுகின்றனர்.எனவே, போதிய இடவசதி, அடிப்படை வசதியுடன் புதிய துணை சுகாதார நிலையம் ஏற்படுத்த, மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.