மறைமலைநகர் -- ஆப்பூர் தடத்தில் சிற்றுந்துகள் இயக்க வேண்டுகோள்
மறைமலைநகர்:மறைமலைநகர் -- ஆப்பூர் சாலை 7 கி மீ., துாரம் உடையது. இந்த தடத்தில் பேரமனுார், சட்ட மங்கலம், பாளையம், கணபதி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.இப்பகுதி மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளான கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்டவற்றுக்கு மறைமலைநகர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் சென்று வருகின்றனர்.இந்த தடத்தில் பேருந்து, ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் பள்ளி குழந்தைகள், பணிக்குச் செல்லும் பெண்கள் நடந்து செல்வதும், அந்த வழியாகச் செல்லும் வாகனங்களில் 'லிப்ட்' கேட்டும் செல்லும் நிலை பல ஆண்டுகளாக தொடர்கிறது.எனவே, இந்த தடத்தில் சிற்றுந்துகள் இயக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.