| ADDED : ஜூலை 28, 2024 11:36 PM
கூடுவாஞ்சேரி : காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி விநாயகபுரத்தில் வசிப்பவர் பத்மநாபன், 68. இவர், அதே பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவரிடம், ரியல் எஸ்டேட் உரிமையாளரான விநாயகம், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செக்கை கொடுத்து, ஊரப்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ள வங்கியில் கொடுத்து, பணம் பெற்று வருமாறு கூறியுள்ளார்.அதை பெற்றுக்கொண்டு வங்கிக்குச் சென்ற பத்மநாபன், 2 லட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று, அவரது இருசக்கர வாகனத்தின் சீட்டுக்கு அடியில் பணப்பையை வைத்துக் கொண்டு வந்துள்ளார்.வரும் வழியில், ஒரு டீ கடையில் டீ அருந்தியுள்ளார். அங்கிருந்து கிளம்பி, அலுவலகம் வந்து பார்த்தபோது, அவர் வைத்திருந்த பணப்பையை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார்.இது குறித்து, கிளாம்பாக்கம் காவல் நிலையத்தில், பத்மநாபன் புகார் அளித்தார். அதன்படி வழக்கு பதிந்த போலீசார், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.அதில், இரண்டு நபர்கள், இவரது இரு சக்கர வாகனத்தின் சீட்டை உடைத்து, பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. அடையாளம் காணப்பட்ட இருவரையும், போலீசார் தேடி வருகின்றனர்.