உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 15வது நிதிக்குழு மானிய ஒதுக்கீட்டு அனுமதி முடக்கம்

15வது நிதிக்குழு மானிய ஒதுக்கீட்டு அனுமதி முடக்கம்

... ஊராட்சிகளில் வளர்ச்சி திட்டப்பணி பாதிப்புதிருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சிகளில் 15வது நிதிக்குழு மானிய ஒதுக்கீட்டில் அனுமதி அளிக்காததால், குடிநீர் உள்ளிட்ட வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள முடியாமல், ஊராட்சி நிர்வாகங்கள் தவித்து வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில், 359 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் தெரு விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட திட்டங்களை ஏற்படுத்த, மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் நிதி வழங்கப்படுகிறது. இதில், மத்திய அரசின் 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் வரையறுக்கப்பட்ட பணிகள் மற்றும் வரையறுக்கப்படாத பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்படுகிறது. குடிநீர் பணிகளுக்காக 30 சதவீதம், சுகாதாரப் பணிகளுக்கு 30 சதவீதம் மற்றும் ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்காக 40 சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. ஆனால், 2025 - 2026ம் நிதியாண்டு துவங்கி ஏழு மாதங்கள் முடிவுற்ற நிலையில், ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளை தேர்வு செய்வதில் குழப்பம் நிலவுகிறது. எந்த கிராமங்களில் என்னென்ன பணிகளை துவங்க வேண்டும் என, 15வது நிதி குழு மானியம் சார்பில் அனுமதி அளிக்கப்படாததால், ஊராட்சி நிர்வாகத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர். இதுகுறித்து ஊராட்சி தலைவர்கள் கூறியதாவது: மத்திய அரசின் 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, பிற மாவட்டங்களில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் மட்டும், இன்னும் நிர்வாக அனுமதிக்கான நிதி வழங்கப் படாமல் உள்ளது. இதனால் வறட்சி காலத்தில் குடிநீர் பணிகளை தொடர்ந்து செய்ய முடியாமல் ஊராட்சி மக்கள் சிரமப்படுகின்றனர். தற்போது பருவமழை துவங்கியுள்ள நேரத்திலும், கிராம ஊராட்சிகள் தேர்வு செய்துள்ள சுகாதாரப் பணிகளான மழைநீர் வடிகால்வாய், தரைப் பாலங்கள், சமுதாய கழிப்பறைகள் உள்ளிட்ட பணிகளை துவங்க முடியாமலும் பொதுமக்களுக்கு பணியாற்ற முடியாமலும், உள்ளாட்சி பிரதிநிதிகள் தவித்து வருகின்றனர். ஏற்கனவே பெரும்பாலான ஊராட்சிகளுக்கு, மாநில நிதிக்குழு மானியத்தில் இருந்து வழங்கப்படும் ஊராட்சி பொது நிதி, பெரும்பாலான ஊராட்சிகளுக்கு போதியதாக இல்லாத நிலையில், அடிப்படை வசதிகளான குடிநீர், தெருவிளக்கு அமைத்தல் போன்ற பணிகளை செய்ய முடியாமல் உள்ளது. தற்போது மத்திய அரசின் 15வது நிதிக்குழு மானியத்தில் ஒதுக்கப்படும் பணிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்தால் நிர்வாக அனுமதி வழங்கப்படாததால் உள்ளாட்சி பிரதிநிதிகள் செய்வது அறியாமல் தவிக்கின்றனர். எந்தெந்த கிராமங்களில் என்ன பணிகள் செய்ய வேண்டும் என உள்ளாட்சி நிர்வாகிகளிடம் கேட்காமல், அதிகாரிகள் தனிச்சையாக செயல்படுகின்றனர். அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் அனுமதி வழங்காமல், அதிகாரிகள் இழுத்தடிக்கின்றனர். எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 359 ஊராட்சிகளுக்கும், 2025 - 2026ம் நிதி ஆண்டுக்கான 15வது நிதிக்குழு மானியத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணிகளுக்கு, உடனடியாக நிர்வாக அனுமதி அளிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை