இடைக்கழிநாடு பேரூராட்சியில் ஆதார் பதிவு மையம் துவக்கம்
செய்யூர்: இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் கிராமத்தில், பேரூராட்சி சார்பாக புதிதாக ஆதார் பதிவு மையம் துவக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வந்துள்ளது. செய்யூர் அடுத்துள்ள இடைக்கழிநாடு பேரூராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்கு, 30,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு ஆதார் பதிவு மையம் இல்லாததால், செய்யூர் வட்டாட்சியர் அலுவலகம் சென்று, ஆதார் அட்டையில் திருத்தம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. செய்யூர் ஆதார் மையத்தில், காத்திருக்க போதிய இட வசதியில்லை. தாலுகாவில் உள்ள ஒரே ஆதார் மையம் என்பதால், தினமும் ஏராளமானோர் குவிகின்றனர். எனவே, இடைக்கழிநாடு பகுதியில் மற்றொரு ஆதார் மையம் ஏற்படுத்த, மக்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்நிலையில், கடப்பாக்கத்தில் உள்ள இடைக்கழிநாடு பேரூராட்சி அலுவலகம் அருகே புதிய ஆதார் பதிவு மையம் துவக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. பெயர் மாற்றம் செய்தல், புதிதாக ஆதார் கார்டு எடுத்தல், முகவரி மாற்றங்கள் செய்தல், தொலைபேசி எண் இணைத்தல், மாற்றுதல் என, ஆதார் தொடர்பான அனைத்திற்கும் இந்த மையத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். தினமும், காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை செயல்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.