உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கருங்கல் ஏற்றிய டிப்பர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

கருங்கல் ஏற்றிய டிப்பர் லாரி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் அருகே முருங்கை ஊராட்சியில், குவாரியிலிருந்து கருங்கல் ஏற்றிச் சென்ற டிப்பர் லாரி, பாரம் தாங்காமல் சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். எலப்பாக்கம் அருகே உள்ள ஆணைக்குன்னத்தில் செயல்படும் தனியார் கல் குவாரியில் இருந்து கருங்கல் ஏற்றிய டிப்பர் லாரி, நேற்று அதிகாலை 1:00 மணியளவில், ஒலக்கூர் வழியாக புதுச்சேரி அருகே உள்ள திருவக்கரை நோக்கிச் சென்றது. மதுரை மாவட்டம், மேலுார் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன், 45, என்பவர், லாரியை ஓட்டிச் சென்றார். அச்சிறுபாக்கம் அருகே முருங்கை கிராமத்தில் சென்ற போது, அதிக பாரம் காரணமாக நிலை தடுமாறிய டிப்பர் லாரி, சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார். இந்த விபத்து நள்ளிரவில் ஏற்பட்டதால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. பின், 'கிரேன்' மற்றும் 'பொக்லைன்' இயந்திரத்தின் உதவியுடன் டிப்பர் லாரி மீட்கப்பட்டது. இது குறித்து, ஒரத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். ஆணைக்குன்னத்தில் இருந்து கருங்கல் ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரிகள், இரவு நேரத்தில் அதிகமாக செல்கின்றன. ஆத்துார் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணத்தை தவிர்க்கும் வகையில், கிராம சாலையான முருங்கை -- ஒலக்கூர் சாலையை லாரிகள் பயன்படுத்துகின்றன. முருங்கை கிராம சாலை குறுகியதாக உள்ளதால், அடிக்கடி டிப்பர் லாரிகளால் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கண்காணித்து, அதிக பாரம் ஏற்றிச்செல்லும் டிப்பர் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். - ம. கேசவன், சமூக ஆர்வலர், முருங்கை கிராமம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை