கல்வி உதவித்தொகை பெற மாணவர்களுக்கு அழைப்பு
செங்கல்பட்டு:மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் தமிழக மாணவர்கள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சீர்மரபினர் சார்ந்த மாணவ - மாணவியர் படித்து வருகின்றனர்.இவர்களின் குடும்ப ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர் ஒருவருக்கு கல்வி உதவித்தொகையாக கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், தேர்வு கட்டணம் ஆகியவற்றுக்காக, அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது.இந்த கல்வியாண்டின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள், சென்னை பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்கம் ஆகியவற்றை தொடர்புகொள்ளலாம்.செங்கல்பட்டு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் அல்லது https;//bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.புதுப்பிக்கும் விண்ணப்பங்களை, வரும் டிச., 15க்குள் மற்றும் புதிய விண்ணப்பங்களை வரும் ஜன., 15க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.