கல்லுாரி மாணவருக்கு கத்திக்குத்து சக மாணவர் வெறிச்செயல்
சித்தாமூர், பொலம்பாக்கத்தில் முன்விரோதம் காரணமாக, கல்லுாரி மாணவரை கத்தியால் குத்திய, சக கல்லுாரி மாணவரிடம் போலீசார் விசாரிக்கின்றனர். சித்தாமூர் அடுத்த பொலம்பாக்கம் கிராமத்தில், தனியார் பாலிடெக்னிக் கல்லுாரி செயல்பட்டு வருகிறது. நேற்று காலை 11:30 மணியளவில், இக்கல்லுாரியில் இரண்டாமாண்டு படித்து வரும் 17 வயது மாணவர் ஒருவர், முதலாமாண்டு படித்து வரும் 16 வயது மாணவரை, கல்லுாரிக்கு அருகே உள்ள செல்லியம்மன் கோவிலின் பின்புறம் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், முதலாமாண்டு மாணவரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த முதலாமாண்டு மாணவரை, சக மாணவர்கள் மீட்டு, ஆம்புலன்சில் மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தற்போது, செங்கல்பட்டு மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, சித்தாமூர் போலீசார் வழக்கு பதிந்து, கத்தியால் குத்திய இரண்டாமாண்டு மாணவரை கைது செய்து விசாரித்தனர். இதில், கடந்த வாரம் இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக, நேற்று திட்டமிட்டு கத்தியால் குத்தியது தெரிந்தது.