மாம்பாக்கத்தில் ரூ.23.80 லட்சத்தில் புது சாலை அமைக்கும் பணி துவக்கம்
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கம் ஊராட்சி, ஐந்தாவது வார்டில், எஸ்.எஸ்.ஆர்.பங்கஜம் அவென்யூ சாலை உள்ளது. இச்சாலையில், 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக, இச்சாலை கடுமையாக சேதமடைந்து இருந்தது. மழைக்காலங்களில் சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கியதால், மக்கள் சாலையில் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுமட்டுமின்றி, வாகனங்களும் செல்ல முடியாத நிலை தொடர்ந்தது. சாலையில் உள்ள பள்ளங்களில் வாகன ஓட்டிகள் தடுமாறி விழுந்து காயமடைந்து வந்தனர். இதுகுறித்து, பி.டி.ஓ., அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில், அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை மனு அளித்து வந்தனர். இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து, புதிய தார்ச்சாலை அமைக்க, ஊராட்சி பொது நிதியில் இருந்து, 23.80 லட்சம் ரூபாயில் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது, சாலை அமைக்கும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக, 'பொக்லைன்' இயந்திரம் மூலமாக சாலையில் உள்ள மேடு பள்ளங்களை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.