வாயலுாரில் குடிநீர் பற்றாக்குறை குளத்தை துார்வார கோரிக்கை
புதுப்பட்டினம்:வாயலுாரில், குடிநீர் தேவைக்காக குளத்தை துார் வாரி சீரமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்பாக்கம் அடுத்த வாயலுார் ஊராட்சியிலுள்ள காரைத்திட்டு பகுதியில், 75க்கும் மேற்பட்ட இருளர் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு போதிய குடிநீர் கிடைக்காமல், அருகிலுள்ள மற்ற பகுதிகளுக்குச் சென்று குடிநீர் கொண்டு வருகின்றனர். இவர்கள் வசிப்பிடத்திற்கு அருகில், 1.16 ஏக்கர் பரப்பில் குளம் ஒன்று உள்ளது. இக்குளம், நீண்ட காலமாக பராமரிப்பின்றி துார்ந்துள்ளதால், மழைநீரை அதிக அளவில் தேக்க முடியாத நிலை உள்ளது. இந்த குளத்தை பராமரித்து மேம்படுத்தினால், இருளர்களுக்கு நீராதாரமாக அமையும். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது: காரைத்திட்டு பகுதியில் வசித்து வரும் எங்களுக்கு, போதிய குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீருக்காக நீண்ட துாரம் அலைய வேண்டியுள்ளது. இந்த குளத்தை துார் வாரி, குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்து குடிநீர் வழங்க, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.