பெருக்கரணை தண்டாயுதபாணி கோவிலில் குவியும் பக்தர்கள்
சித்தாமூர்: மேல்மருவத்துார் கோவிலுக்கு வரும் பக்தர்கள், பெருக்கரணை கிராமத்தில் உள்ள மரகத தண்டாயுதபாணி கோவிலுக்கு வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி விழா வெகு விமரிசையாக நடக்கும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கார், வேன், பேருந்துகள் மூலமாக, லட்சக்கணக்கான பக்தர்கள் சக்தி மாலை அணிந்து வந்து, வழிபாடு செய்வது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு தைப்பூச ஜோதி விழா துவக்கப்பட்டு நடந்து வரும் நிலையில், தற்போது வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள், மேல்மருவத்துார் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். அத்துடன், மேல் மருவத்துார் வரும் பெரும்பாலான பக்தர்கள், அருகே 10 கி.மீ., துாரத்தில், பெருக்கரணை கிராமத்தில் உள்ள மரகத தண்டாயுதபாணி கோவிலுக்கும் வந்து, சுவாமி தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.