உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஆறு மாதங்களில் நாய்க்கடிக்கு ஆளானோர்... 39,259 பேர்;செங்கையில் 13,064; சென்னையில் 5,970

ஆறு மாதங்களில் நாய்க்கடிக்கு ஆளானோர்... 39,259 பேர்;செங்கையில் 13,064; சென்னையில் 5,970

செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில், ஆறு மாதங்களில், 39,259 பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர்; இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டை விட பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மாநகராட்சியில் மட்டும், 1.80 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் இருப்பது, சமீபத்திய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது. அதையொட்டி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்த்து, ஐந்து லட்சம் தெரு நாய்கள் வரை இருக்கலாம் என, கால்நடை டாக்டர்கள் கூறுகின்றனர்.தெரு நாய்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிறுவர் - சிறுமியர் ஆகியோரை, கடித்து துரத்தும் சம்பவங்கள் தொடர்கின்றன. இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்திக் கடிப்பது, அதனால் விபத்து ஏற்படுவது போன்ற சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.சென்னை போன்ற நகரங்களில் தெரு நாய்களை கட்டுப்படுத்த, நாய் கருத்தடை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு, தினமும் 10 முதல் 20 நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. மேலும், வெறிநாய் கடி பாதிப்பை தடுக்க, ரேபீஸ் தடுப்பூசியும் போடப்பட்டு, ஒட்டுண்ணி நீக்கப்பட்டு வருகிறது.அதேசமயம், தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணியில், சென்னை மாநகராட்சி தீவிரம் காட்டினாலும், அருகிலுள்ள மாவட்ட நிர்வாகங்கள் கவனம் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆறு மாதங்களில் சென்னை மாநகராட்சியில், 5,970 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அருகிலுள்ள மாவட்டங்களில் இதன் பாதிப்பு இரண்டு மடங்காக உள்ளது.இந்த நான்கு மாவட்டங்களில் மட்டும், 39,259 பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தலா ஒருவர் ரேபீஸ் நோய் பாதித்து உயிரிழந்துள்ளனர்.இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சென்னையில் ஒவ்வொரு ஆண்டும், 20,000க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யப்படுகிறது. மேலும், புகாரின் அடிப்படையில் தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதேபோல், தெரு நாய்கள் தொல்லை என, 25,000க்கும் மேற்பட்ட புகார்கள் பெறப்பட்டு, அவர்களுக்கு தீர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.தெரு நாய்களுக்கு ரேபீஸ் நோய் ஏற்படாமல் இருக்க தடுப்பூசி போடப்படுவதுடன், நாய்க்கடியால் பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னையில் தெரு நாய்க்கடி குறைந்து இருப்பதுடன், உயிரிழப்புகள் இல்லாத நிலை உள்ளது. தொடர்ந்து, தெரு நாய்க்கடி பாதிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:சென்னையில் நாய்க்கடிக்கு ஆளானோர் எண்ணிக்கை குறைந்துள்ளது வரவேற்கத்தக்கது. ஆனால், தெரு நாய்களின் பெருக்கம் குறைந்ததாக தெரியவில்லை. தெருக்களில், நிம்மதியாக நடந்து கூட செல்ல முடியவில்லை. நாய்கள் எல்லாம் வெறி பிடித்து அலைகின்றன. அவற்றை கட்டுப்படுத்துவதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.செங்கல்பட்டு மாவட்டத்தில் நாய்க்கடியால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, கவலை அளிக்கிறது. மற்ற மாவட்டங்களிலும், நாய்களை கட்டுப்படுத்த பொது சுகாதாரத்துறையும், உள்ளாட்சி அமைப்புகளும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

சாப்பாடு கொடுத்தா மட்டும் போதுமா?

விலங்கின பிரியர்கள், அவர்களது வளாகத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நாய்களை வளர்க்கலாம்; அதில் தவறில்லை. ஆனால், நாய் பிரியர்கள் எனக்கூறி கொண்டு, தெருநாய்களுக்கு உணவு அளிப்பதோடு நிறுத்தி விடுகின்றனர்.அந்நாய்க்கு இருப்பிடமோ, தடுப்பூசியோ, நோய் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவோ, அவர்கள் முயற்சிப்பது இல்லை. இதனால், உணவு கிடைக்காத நேரங்களிலும், மிரட்டலுக்கு உள்ளான நேரங்களிலும், அவ்வழியே செல்வோரை தெருநாய்கள் கடித்து விடுகின்றன.எனவே, நாய் வளர்க்க விரும்புவோர் தெருநாய்களை தத்தெடுத்து, அவற்றிற்கு முறையாக உணவளிப்பது, தடுப்பூசி போடுவதுடன், நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும்.- செல்வவிநாயகம், இயக்குநர்,தமிழக பொது சுகாதாரத்துறை

நாய்க்கடி பாதிப்பு

மாவட்டம் - 2024 - 2025 (ஜூன் 19 வரை) - பாதிப்புசென்னை - 11,704 -5,970செங்கல்பட்டு - 17,076 -13,064காஞ்சிபுரம் - 4,612 - 9,747திருவள்ளூர் - 15,191 - 10,478மொத்தம் - 48,583 - 39,259

தினமும் 20 பேருக்கு கடி

கூடுவாஞ்சேரி மருத்துவமனை ஊழியர்கள் கூறியதாவது: கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுப்புறத்தில் உள்ள 30க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், தற்போது 10,000க்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளன. இரவு, பகல் என, நாளொன்றுக்கு சராசரியாக, 20 நபர்கள் நாய்க்கடிக்கு ஆளாகி, இங்கு வந்து ஊசி போட்டுச் செல்கின்றனர். சில நாட்களில் இந்த எண்ணிக்கை 30க்கும் மேல் உள்ளது. சுற்றுப் பகுதியில் வேறு எங்கும் அரசு மருத்துவமனை இல்லை. எனவே, இங்கு தான் பெரும்பாலானோர் வந்து, சிகிச்சை பெறுகின்றனர். தவிர, தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வோரையும் கணக்கிட்டால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி